இப்போது வலைப்பூக்களில் சென்னையைப் பற்றி ஒரு பதிவு போடுவது அத்தியாவசியமாகி விட்டதால் இதோ நமது பதிவு…. சென்னையைப் பற்றிய நினைவுகளை வரிசைக்கிரமமாக நினைவுப்படுத்துவது சென்னையிலேயே பிறந்து சென்னையிலேயே வளர்ந்து சென்னையிலேயே வாழ்பவனுக்கு ரொம்பவும் கடினம்…. எனினும் முயற்சிக்கிறேன்….
நான் ஏற்கனவே பலமுறை சொல்லியபடி சென்னைக்கு மிக அருகாமையில் இருக்கும் கிராமமான (இப்போ சிட்டி லிமிட்டிலிருந்து 3 கி.மீ) மடிப்பாக்கத்திலேயே பிறந்து வளர்ந்தவன் நான்….
என் குழந்தைப் பருவத்தின் போது மடிப்பாக்கத்திலிருந்து சிட்டிக்குள் நுழைவதற்கே பிரம்மப் பிரயத்தனம் செய்ய வேண்டும்…. மடிப்பாக்கத்திலிருந்து ஒரு குதிரை வண்டிப் பிடித்து சுமார் மூன்றரை கி.மீ. பயணம் செய்து பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு வந்து மின் தொடர் வண்டியில் செல்ல வேண்டும்….
அதன் பிறகு ஓரிரண்டு பேருந்துகள் மடிப்பாக்கத்துக்கு 80களின் ஆரம்பத்தில் வரத் தொடங்கியதாம்… அதுபோல முதலில் வந்தப் பேருந்து 18D…. கீழ்க்கட்டளை – பெரியார் பாலம் (சிம்சன்)… என் பாட்டனார் வீடு சிந்தாதிரிப் பேட்டையில் இருந்தது…. அங்கு செல்ல 18Dயில் தான் வரவேண்டும்…. சிறு வயதில் அந்தப் பேருந்தில் வந்தபோது எனக்கு இன்னமும் நினைவில் இருக்கும் ஒரு விஷயம் அப்பு ஹோர்டிங்….
சென்னை நந்தனம் சிக்னலில் மிகப் பெரியதாக (இப்போ அதுக்கெல்லாம் தாத்தா சைஸில் ஹோர்டிங்குகள் இருக்கிறது) வரையப்பட்டிருந்த அப்பு ஹோர்டிங் என் நினைவில் மங்கலாகத் தெரிகிறது…. டெல்லியில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக அது வரையப்பட்டிருக்கலாம்…. சிறு வயது என்பதால் எதற்காக வரைந்தார்கள் என்று நினைவில்லை….
அப்புறம் சிம்சனுக்குப் பின்னால் இருக்கும் மே தினப்பூங்கா…. இன்று கூட அந்தப் பூங்கா 20 ஆண்டுகளுக்கு முன்னால் பார்த்தமாதிரியே தான் இருக்கிறது…. பெரிய மாற்றம் ஒன்றும் இல்லை…. இப்போது கொஞ்சம் பசுமை குறைந்தது மாதிரி தெரிகிறது….
சிறு வயதில் பீச்சுக்குப் போவது என்பது ஏதோ கும்பமேளாவுக்கு போவது மாதிரி ஒரு அதிசய விஷயம் எங்களுக்கெல்லாம்… பொங்கல் சீஸனில் எக்ஸிபிஷன் போகும் போது பீச்சுக்கும் அப்படியே ஒரு விசிட் அடிப்போம்…. வீட்டுக்கு ஒரே பிள்ளை என்பதால் என் தந்தையார் அலைகளில் விளையாட அனுமதிக்க மாட்டார்… அடம் பிடித்து அழுதுப் புரண்டால் ஓரமாக நிற்க அனுமதிப்பார்…. கடுப்பாக இருக்கும்… கணுக்கால் வரையிலான நீரில் தான் நிற்க வேண்டும்…. எனக்கு இன்னமும் சென்னையில் பிரமிப்பு தரும் விஷயம் வங்கக் கடல் தான்…. பீச்சுக்கு போகும் போதெல்லாம் அலைகள் ஏதோ என் காதில் ரகசியம் ஒன்றை சொல்ல வருவது போல ஒரு உணர்வு… இன்னமும் அந்த உணர்வுகளை உணர்கிறேன்….
இப்போதெல்லாம் பீச்சுக்கு போனால் அலைகளில் நனைவதில்லை…. சிறுவயதில் ஆசைப் பட்டேன்… ஆனால் இப்போது நனைவதற்கு வெட்கமாக இருக்கிறது…. சிறு குழந்தைகளும், அழகுப் பெண்களும் அலையில் ஆட்டம் போடும் போது எருமை மாடு மாதிரி நாமும் குதித்தால் ஒரு மாதிரியாக நினைப்பார்களே என்று சங்கோஜமாக இருக்கிறது…. சில நண்பர்களோடு ஆளரவமற்ற திருவான்மியூர் பீச்சுக்குச் செல்லும் போது (இப்போ அங்கே கூட செம கூட்டம் தான்) குளிப்பதுண்டு…..
இங்கே என்னை எப்பவும் கவர்ந்திழுக்கும் ஒரு விஷயம் பொங்கலை முன்னிட்டு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சித்துறை நடத்தும் டிரேட் பேர் தான்…. சிறு வயதில் ஆண்டுக்கு ஒரு முறை அப்பா கூட்டிப் போவார்…. சம்பிரதாயமாக அரசு ஸ்டால்களை எந்த ஆர்வமும் இன்றி அந்தக் காலத்தில் வெறித்துப் பார்ப்பேன்…. டிரேட் பேர் முகப்பில் அந்தக் காலத்தில் வைக்கப்படும் மோதிரம் கடிக்கும் எம்.ஜி.ஆர் கட்-அவுட் எனக்கு ரொம்பவும் பிடித்த ஒன்று….
மிளகாய் பஜ்ஜி இன்று சென்னையில் எல்லா டீக்கடைகளிலும் கூட கிடைக்கின்றன…. எனக்குத் தெரிந்து இந்த கான்செப்ட் முதலில் வந்ததே அந்த எக்ஸிபிஷனில் தான்… செம மட்டமான எண்ணையில் பொறித்தெடுக்கப் பட்டாலும் அந்த மிளகாய் பஜ்ஜியின் சுவையே தனி தான்….
எக்ஸிபிஷனில் பாம்பு உடலுடன் மங்கை, மாயக்கண்ணாடி போன்ற காமெடிகளும் உண்டு…. ஜயண்ட் வீலில் சுற்றுவது என்றாலே எனக்கு நிரம்ப பயம்…. மிகப் பெரிய அந்த வீலில் மேலே ஏறும்போது ஒன்றும் தெரியாது…. வீல் கீழே இறங்கும்போது செமையாக வயத்தைப் பிரட்டும்… ஆனாலும் அந்த ஜயண்ட் வீலில் மேலே போகும்போது தெரியும் ரம்மியமான காட்சிகளுக்காகவே (கூவம் கூட தூரத்தில் இருந்து பார்ப்பதற்கு நல்லா தான் இருக்கும்) அதில் போகலாம்…. இப்பொதும் கூட நண்பர்களோடு ஜாலியாக எக்ஸிபிஷனுக்கு செல்லும் வழக்கம் எனக்குண்டு….
இந்நகரத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை தீபாவளியோ, பொங்கலோ அல்ல… ஆயுத பூஜை தான்… ஆயுத பூஜை நேரத்தில் சென்னையின் ஏதோ மார்க்கெட் வீதிக்கு சென்றுப் பாருங்கள்… அந்தப் பிரும்மாண்டம் புரியும்… குறிப்பாக தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோடு நெரிசல்…. யப்பா…. தாங்க முடியாது….
நகரில் எப்போதுமே என்னை பிரமிக்க வைப்பவை தியேட்டர்கள் தான்… ஹையர் செகண்டரி படிக்கும்போது தினமும் கட் அடித்து விட்டு சிட்டிக்கு வந்து நண்பர்களோடு படங்கள் பார்ப்பது வழக்கம்… சென்னனயில் கிட்டத்தட்ட 80 சதம் தியேட்டர்களுக்கும் போய்ப் பார்த்தாயிற்று…. என் அனுபவத்தில் சென்னையில் Best தியேட்டர் காம்ப்ளக்ஸ் சத்யம் தான்… சிறு வயதில் எனக்கு பிரமிப்பு ஊட்டிய தியேட்டர் தேவி…. மற்றபடி கெயிட்டி, ஜோதி தியேட்டர்களும் நம்ம Favourite லிஸ்ட்டில் வேறு சில காரணங்களுக்காக இருந்தது
அப்போதும், இப்போதும், எப்போதும் வெறுப்பேற்றுவது டிராபிக் நெரிசலே…. என் பெங்களூர் நண்பர்கள் சென்னைக்கு இந்த விஷயத்துலே கோயில் கட்டி கும்பிடலாம்டா என்பார்கள்…. ஆனாலும் எனக்கென்னவோ இந்த நெரிசல் ரொம்பவும் வெறுப்பேற்றுகிறது…. குறிப்பாக நந்தனம் சிக்னல்… பீக் அவர்ஸில் அந்த சிக்னல் வழியாக வந்தால் குறைந்தது 3 ரெட் சிக்னலாவது வாங்குவீர்கள்…. பீக் அவர்ஸ் என்றில்லை… மற்ற நேரங்களில் சென்றாலும் ஒரு முறையாவது நின்று தான் செல்ல வேண்டும்….
சென்னைத் தமிழர்களின் மொழி பற்றி பத்திரிகைகளும், சினிமாக்களும் ரொம்ப நக்கலடிக்கிறார்கள்… கொஞ்சம் மோசம் தான்…. அந்த அளவுக்கு மோசமாக எல்லாம் இங்கே பேசுவதில்லை… ரொம்பவும் மிகைப்படுத்தி சொல்கிறார்கள் சென்னை செந்தமிழை…. என்ன எதுவாக இருந்தாலும் சென்னைத் தமிழன் ஆரம்பிக்கும் போது “ஓ……..” என்று ஆரம்பிப்பான்
அவ்வளவுதான்…..
சென்னைப் பற்றி நிறையப் பேசலாம்…. பேசிக்கொண்டே இருக்கலாம்…. ஆனால் எழுத்துக்களில் சொல்வது எனக்கு கொஞ்சம் கடினமாக இருக்கிறது….
சென்னை – தமிழர்களின் இன்றைய அன்னை!
லக்கிலுக் பதிப்பித்தது.
லக்கிலுக் பதிப்பித்தது.
லக்கிலுக் பதிப்பித்தது. 