சென்னை நினைவுகள்!

ஆகஸ்ட் 31, 2006

இப்போது வலைப்பூக்களில் சென்னையைப் பற்றி ஒரு பதிவு போடுவது அத்தியாவசியமாகி விட்டதால் இதோ நமது பதிவு…. சென்னையைப் பற்றிய நினைவுகளை வரிசைக்கிரமமாக நினைவுப்படுத்துவது சென்னையிலேயே பிறந்து சென்னையிலேயே வளர்ந்து சென்னையிலேயே வாழ்பவனுக்கு ரொம்பவும் கடினம்…. எனினும் முயற்சிக்கிறேன்….

நான் ஏற்கனவே பலமுறை சொல்லியபடி சென்னைக்கு மிக அருகாமையில் இருக்கும் கிராமமான (இப்போ சிட்டி லிமிட்டிலிருந்து 3 கி.மீ) மடிப்பாக்கத்திலேயே பிறந்து வளர்ந்தவன் நான்….

என் குழந்தைப் பருவத்தின் போது மடிப்பாக்கத்திலிருந்து சிட்டிக்குள் நுழைவதற்கே பிரம்மப் பிரயத்தனம் செய்ய வேண்டும்…. மடிப்பாக்கத்திலிருந்து ஒரு குதிரை வண்டிப் பிடித்து சுமார் மூன்றரை கி.மீ. பயணம் செய்து பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு வந்து மின் தொடர் வண்டியில் செல்ல வேண்டும்….

அதன் பிறகு ஓரிரண்டு பேருந்துகள் மடிப்பாக்கத்துக்கு 80களின் ஆரம்பத்தில் வரத் தொடங்கியதாம்… அதுபோல முதலில் வந்தப் பேருந்து 18D…. கீழ்க்கட்டளை – பெரியார் பாலம் (சிம்சன்)… என் பாட்டனார் வீடு சிந்தாதிரிப் பேட்டையில் இருந்தது…. அங்கு செல்ல 18Dயில் தான் வரவேண்டும்…. சிறு வயதில் அந்தப் பேருந்தில் வந்தபோது எனக்கு இன்னமும் நினைவில் இருக்கும் ஒரு விஷயம் அப்பு ஹோர்டிங்….

சென்னை நந்தனம் சிக்னலில் மிகப் பெரியதாக (இப்போ அதுக்கெல்லாம் தாத்தா சைஸில் ஹோர்டிங்குகள் இருக்கிறது) வரையப்பட்டிருந்த அப்பு ஹோர்டிங் என் நினைவில் மங்கலாகத் தெரிகிறது…. டெல்லியில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக அது வரையப்பட்டிருக்கலாம்…. சிறு வயது என்பதால் எதற்காக வரைந்தார்கள் என்று நினைவில்லை….

அப்புறம் சிம்சனுக்குப் பின்னால் இருக்கும் மே தினப்பூங்கா…. இன்று கூட அந்தப் பூங்கா 20 ஆண்டுகளுக்கு முன்னால் பார்த்தமாதிரியே தான் இருக்கிறது…. பெரிய மாற்றம் ஒன்றும் இல்லை…. இப்போது கொஞ்சம் பசுமை குறைந்தது மாதிரி தெரிகிறது….

சிறு வயதில் பீச்சுக்குப் போவது என்பது ஏதோ கும்பமேளாவுக்கு போவது மாதிரி ஒரு அதிசய விஷயம் எங்களுக்கெல்லாம்… பொங்கல் சீஸனில் எக்ஸிபிஷன் போகும் போது பீச்சுக்கும் அப்படியே ஒரு விசிட் அடிப்போம்…. வீட்டுக்கு ஒரே பிள்ளை என்பதால் என் தந்தையார் அலைகளில் விளையாட அனுமதிக்க மாட்டார்… அடம் பிடித்து அழுதுப் புரண்டால் ஓரமாக நிற்க அனுமதிப்பார்…. கடுப்பாக இருக்கும்… கணுக்கால் வரையிலான நீரில் தான் நிற்க வேண்டும்…. எனக்கு இன்னமும் சென்னையில் பிரமிப்பு தரும் விஷயம் வங்கக் கடல் தான்…. பீச்சுக்கு போகும் போதெல்லாம் அலைகள் ஏதோ என் காதில் ரகசியம் ஒன்றை சொல்ல வருவது போல ஒரு உணர்வு… இன்னமும் அந்த உணர்வுகளை உணர்கிறேன்….

இப்போதெல்லாம் பீச்சுக்கு போனால் அலைகளில் நனைவதில்லை…. சிறுவயதில் ஆசைப் பட்டேன்… ஆனால் இப்போது நனைவதற்கு வெட்கமாக இருக்கிறது…. சிறு குழந்தைகளும், அழகுப் பெண்களும் அலையில் ஆட்டம் போடும் போது எருமை மாடு மாதிரி நாமும் குதித்தால் ஒரு மாதிரியாக நினைப்பார்களே என்று சங்கோஜமாக இருக்கிறது…. சில நண்பர்களோடு ஆளரவமற்ற திருவான்மியூர் பீச்சுக்குச் செல்லும் போது (இப்போ அங்கே கூட செம கூட்டம் தான்) குளிப்பதுண்டு…..

இங்கே என்னை எப்பவும் கவர்ந்திழுக்கும் ஒரு விஷயம் பொங்கலை முன்னிட்டு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சித்துறை நடத்தும் டிரேட் பேர் தான்…. சிறு வயதில் ஆண்டுக்கு ஒரு முறை அப்பா கூட்டிப் போவார்…. சம்பிரதாயமாக அரசு ஸ்டால்களை எந்த ஆர்வமும் இன்றி அந்தக் காலத்தில் வெறித்துப் பார்ப்பேன்…. டிரேட் பேர் முகப்பில் அந்தக் காலத்தில் வைக்கப்படும் மோதிரம் கடிக்கும் எம்.ஜி.ஆர் கட்-அவுட் எனக்கு ரொம்பவும் பிடித்த ஒன்று….

மிளகாய் பஜ்ஜி இன்று சென்னையில் எல்லா டீக்கடைகளிலும் கூட கிடைக்கின்றன…. எனக்குத் தெரிந்து இந்த கான்செப்ட் முதலில் வந்ததே அந்த எக்ஸிபிஷனில் தான்… செம மட்டமான எண்ணையில் பொறித்தெடுக்கப் பட்டாலும் அந்த மிளகாய் பஜ்ஜியின் சுவையே தனி தான்….

எக்ஸிபிஷனில் பாம்பு உடலுடன் மங்கை, மாயக்கண்ணாடி போன்ற காமெடிகளும் உண்டு…. ஜயண்ட் வீலில் சுற்றுவது என்றாலே எனக்கு நிரம்ப பயம்…. மிகப் பெரிய அந்த வீலில் மேலே ஏறும்போது ஒன்றும் தெரியாது…. வீல் கீழே இறங்கும்போது செமையாக வயத்தைப் பிரட்டும்… ஆனாலும் அந்த ஜயண்ட் வீலில் மேலே போகும்போது தெரியும் ரம்மியமான காட்சிகளுக்காகவே (கூவம் கூட தூரத்தில் இருந்து பார்ப்பதற்கு நல்லா தான் இருக்கும்) அதில் போகலாம்…. இப்பொதும் கூட நண்பர்களோடு ஜாலியாக எக்ஸிபிஷனுக்கு செல்லும் வழக்கம் எனக்குண்டு….

இந்நகரத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை தீபாவளியோ, பொங்கலோ அல்ல… ஆயுத பூஜை தான்… ஆயுத பூஜை நேரத்தில் சென்னையின் ஏதோ மார்க்கெட் வீதிக்கு சென்றுப் பாருங்கள்… அந்தப் பிரும்மாண்டம் புரியும்… குறிப்பாக தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோடு நெரிசல்…. யப்பா…. தாங்க முடியாது….

நகரில் எப்போதுமே என்னை பிரமிக்க வைப்பவை தியேட்டர்கள் தான்… ஹையர் செகண்டரி படிக்கும்போது தினமும் கட் அடித்து விட்டு சிட்டிக்கு வந்து நண்பர்களோடு படங்கள் பார்ப்பது வழக்கம்… சென்னனயில் கிட்டத்தட்ட 80 சதம் தியேட்டர்களுக்கும் போய்ப் பார்த்தாயிற்று…. என் அனுபவத்தில் சென்னையில் Best தியேட்டர் காம்ப்ளக்ஸ் சத்யம் தான்… சிறு வயதில் எனக்கு பிரமிப்பு ஊட்டிய தியேட்டர் தேவி…. மற்றபடி கெயிட்டி, ஜோதி தியேட்டர்களும் நம்ம Favourite லிஸ்ட்டில் வேறு சில காரணங்களுக்காக இருந்தது :-)

அப்போதும், இப்போதும், எப்போதும் வெறுப்பேற்றுவது டிராபிக் நெரிசலே…. என் பெங்களூர் நண்பர்கள் சென்னைக்கு இந்த விஷயத்துலே கோயில் கட்டி கும்பிடலாம்டா என்பார்கள்…. ஆனாலும் எனக்கென்னவோ இந்த நெரிசல் ரொம்பவும் வெறுப்பேற்றுகிறது…. குறிப்பாக நந்தனம் சிக்னல்… பீக் அவர்ஸில் அந்த சிக்னல் வழியாக வந்தால் குறைந்தது 3 ரெட் சிக்னலாவது வாங்குவீர்கள்…. பீக் அவர்ஸ் என்றில்லை… மற்ற நேரங்களில் சென்றாலும் ஒரு முறையாவது நின்று தான் செல்ல வேண்டும்….

சென்னைத் தமிழர்களின் மொழி பற்றி பத்திரிகைகளும், சினிமாக்களும் ரொம்ப நக்கலடிக்கிறார்கள்… கொஞ்சம் மோசம் தான்…. அந்த அளவுக்கு மோசமாக எல்லாம் இங்கே பேசுவதில்லை… ரொம்பவும் மிகைப்படுத்தி சொல்கிறார்கள் சென்னை செந்தமிழை…. என்ன எதுவாக இருந்தாலும் சென்னைத் தமிழன் ஆரம்பிக்கும் போது “ஓ……..” என்று ஆரம்பிப்பான் ;-) அவ்வளவுதான்…..

சென்னைப் பற்றி நிறையப் பேசலாம்…. பேசிக்கொண்டே இருக்கலாம்…. ஆனால் எழுத்துக்களில் சொல்வது எனக்கு கொஞ்சம் கடினமாக இருக்கிறது….

சென்னை – தமிழர்களின் இன்றைய அன்னை!


அ.தி.மு.க. கிரியேஷன்ஸ்

ஆகஸ்ட் 30, 2006

தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுப்பதற்கு தமிழக அரசின் சார்பில் ரூ. 95 லட்சம் மானியமாக வழங்கப்படுவதைக் கண்டு வயிறு எரிந்து ஆரியபவன் இட்லி சாப்பிடும் சின்ன சோ எஸ்.வி.சேகர் சட்டமன்றத்தில் இதுபோல ராஜாஜி மற்றும் மற்ற பிராமணர்களின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுத்தால் இந்த அரசு மானியம் வழங்குமா என்று கேணைத்தனமாக கேள்வி கேட்டிருக்கிறார்…. எஸ்.வி.சேகரின் இந்த கன்னிப்பேச்சை அவரது கட்சியின் தலைவரான அம்மாவும் ரொம்பவும் ரசித்து சிலாகித்ததாக அக்ரஹாரத்து வட்டாரங்கள் தெரிவிக்கின்றன….

இனி திரைப்படங்கள் எப்படியெல்லாம் தயாரிக்கலாம் என அக்ரஹாரத்து தி.மு.க சார்பில் சில வழிகாட்டுதல்களும் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிகிறது… என்னென்ன வழிகாட்டுதல்கள் என அறிய முயற்சித்தபோது கபாலீசுவரர் கோயில் வாசலில் குச்சி விற்றுக் கொண்டிருந்தவர் ஒருவர் சில டிப்ஸ்கள் கொடுத்தார்…. இந்த டிப்ஸ்களில் பெரும்பாலானவை அந்த வழிகாட்டுதல்களில் இடம்பெறும் என நம்பப்படுகிறது….

1) இனி எடுக்கப்படும் எல்லாப் படங்களுமே அம்மா படத்துக்கு பூஜை போட்டே ஆரம்பிக்கப்பட வேண்டும்.

2) யாருடைய வாழ்க்கை வரலாற்றையாவது படமாக எடுக்க வேண்டுமென்றால் பத்திரிகையாளர் சோ அவர்களிடம் ஆலோசனை பெற வேண்டும். அவர் யாருடைய வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கச் சொல்கிறாரோ அவருடைய வரலாறை தான் படமாக எடுக்க வேண்டும்… சோ அவர்களிடம் ராஜாஜி, அருந்தொண்டாற்றிய தமிழக அந்தணர்கள் புத்தகம் எழுதிய கே.சி. லட்சுமிநாராயணன், தினமலர் பவுண்டர் டி.வி.ராமசுப்பையர் போன்ற தலைவர்களின் வாழ்க்கை வரலாறு திரைக்கதை அமைத்து தயராகவே இருக்கிறது.

3) படங்களில் சண்டைக்காட்சிகள் அமைக்க செங்கோட்டையன், சேகர்பாபு போன்றவர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்…. ஸ்டண்ட் கலைஞராக கண்டிப்பாக கலைராஜன் நடித்தே ஆகவேண்டும்…. மைக்கினை தலைக்கு மேலே சுற்றி கதாநாயகனை அடிக்கும் காட்சி கண்டிப்பாக இடம் பெறவேண்டும்….

4) குரூப் டேன்ஸர்களாக அ.தி.மு.க மகளிர் அணியினர் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்…. கவர்ச்சி தேவைப்பட்டால் உயர்நீதிமன்ற வாயிலில் சுப்பிரமணிய சாமியை வரவேற்க மகளிர் அணியினர் ஆடிய நடனத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்…

5) படங்களுக்கு வசனகர்த்தாவாக முத்தமிழ் வித்தகர் காளிமுத்துவை பயன்படுத்திக் கொள்ளுதல் கட்டாயமாக்கப்படும்…. இரட்டை அர்த்த வசனங்கள் தேவைப்பட்டாலும் அவரே எழுதித்தரத் தயாராக இருக்கிறார்…. அவரிடம் “கும்பிடத் தோன்றினால்……. கூப்பிடத் தோன்றினால்” டைப்பில் நிறைய வசனங்கள் கைவசம் தயாராகவே இருக்கிறது…..

6) நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்கள் எடுக்கப்பட வேண்டும்… அதுவும் ஒரு பெண் இன்னொரு பெண்ணுடன் நட்பாக இருப்பதுபோல மட்டுமே காண்பிக்கப் படவேண்டும்….

7) திரைப்படங்களில் வரும் போலிசார் வில்லன்கள் மீது கஞ்சா கேஸ் மட்டுமே போடவேண்டும்…. இதற்கும் ஒரிஜினல் கஞ்சாவைத் தான் பயன்படுத்த வேண்டும்….

8) படங்களின் இயக்குனர்களை அம்மாவே முடிவு செய்வார்…. அம்மா சொல்படி தான் படத்தை இயக்க வேண்டும்… தேவைப்பட்டால் ஒரே படத்துக்கு 50 அல்லது 100 இயக்குனர்கள் வரை அம்மாவே மாற்றுவார்….

9) படங்களில் திருமணக் காட்சிகள் அமைக்கப்பட்டால் அந்தக் காட்சி நூறுகோடி ரூபாய் செலவில் தான் அமைக்கப்படவேண்டும்…. அந்தக் காட்சியில் போலிஸ் கமிஷனர் சாம்பார் வாளி தூக்கி பரிமாறுவது போன்ற காட்சி கட்டாயம் இடம் பெற வேண்டும்…

10) இனி எடுக்கப்படும் படங்களுக்கு கதாநாயகர்களே இருக்கக்கூடாது… கதாநாயகிகள் மட்டும் தான் இருக்க வேண்டும்… படத்தில் இடம் பெறும் ஆண் கதாபாத்திரங்கள் கதாநாயகி காலில் குப்புற விழுந்து வணங்க வேண்டும்….

- அக்ரஹாரத்து தி.மு.கவின் வழிகாட்டுதல்கள் தொடரும்


சம்திங்…. சம்திங்….

ஆகஸ்ட் 7, 2006

பாசமலர் டைப்பில் அண்ணன் + தங்கச்சி, தங்கச்சி ரொம்ப அழகு, ஸ்மார்ட்டான பாரின் ரிட்டர்ன் பையன், ஒரு கிராமத்து வில்லன், ஒரு பேராசைக்கார பணக்கார வில்லன், அந்த வில்லனுக்கு ஒரு பொறாமைக்கார பொண்ணு, காதல், பாசம், சுயமரியாதை, கலாச்சாரம், மண், விவசாயம், இளமை, இசை, நடனம்….. போதாதா ஒரு வெற்றிகரமான மசாலா படம் எடுப்பதற்கு?

கலைஞரின் கேளிக்கை வரி சலுகையில் முதன் முதலாக தன் ஆங்கில டைட்டிலை இழந்து சலுகை பெற்றிருக்கும் படம் “உனக்கும், எனக்கும்”…. சம்திங்… சம்திங்… இருந்திருந்தாலும் ரொம்பப் பொருத்தமாகத் தான் இருந்திருக்கும்…. இருந்தாலும் வரிச்சலுகைக்காக நீக்கியிருக்கிறார்கள்….

தன் அத்தை மகளின் திருமணத்துக்காக தமிழ்நாட்டுக்கு வருகிறார் லண்டன் வாழ் கதாநாயகன்…. திருமணத்துக்கு வந்தவர் அங்கே இருக்கும் ஒரு கிராமத்துப் பைங்கிளியிடம் மனதை பறிகொடுக்கிறார்….. அண்ணலும் நோக்க, அவளும் நோக்க…. சம்திங்…. சம்திங்….

காதலுக்கு வழக்கம்போல அந்தஸ்தும் ஒரு பிரச்சினை…. வேறு ஒரு பணக்காரர் ஒருவரும் தன் மகளுக்கு பாரின் ரிடர்ன் மாப்பிள்ளையை பிராக்கெட் போட நினைக்க…. கிராமத்துப் பிகரின் ஊரிலும் ஒரு வில்லன் அவளை அடைய நினைக்க…. இடையில் பிகரின் அண்னனும் தனக்கு வரப்போகும் மாப்பிள்ளை மண்ணின் பாரம்பரியத்தை உணர்ந்திருக்க வேண்டும் என பிகு பண்ண…. எல்லாம் முடிந்து சுபம்….

ஹீரோ ஜெயம் ரவிக்கு ரொம்ப நாள் கழித்து ஒரு வெற்றிப் படம்…. இவர் ஏனோ இவர் அண்ணனின் இயக்கத்தில் தான் நன்றாக ஜொலிக்கிறார்…. நடனம், ஆக்சன் என்று தூள்பரத்துகிறார்…. மெலிதான நகைச்சுவையும் இவருக்குப் பலம்…. ஹீரோயினாக த்ரிஷா…. பாவாடைத் தாவணியில் பாங்காக இருக்கும் ஒரே தமிழ் நடிகை இப்போதைக்கு இவர் தான்…. தைரியமாக முகத்துக்கு குளோஷப் ஷாட் வைக்க முடிகிறது…. நன்றாக நடிக்கவும் செய்கிறார்….

நிறைய நட்சத்திரப் பட்டாளம் இருந்தாலும் அசால்ட்டாக படத்தில் கோல் அடிப்பது பிரபுவும், பாக்யராஜும் தான்…. குறிப்பாக பிரபு…. அழகாகியிருக்கிறார்…. சின்னத்தம்பி படத்தில் பார்த்ததுபோல இருக்கிறது இந்தப் படத்தில் அவரது தோற்றம்…. இந்த ஜெனரேஷன் நடிகர்கள் அவரிடம் வசன உச்சரிப்பு கற்றுக் கொண்டால் தேவலை…. தங்கை மீது காட்டும் அதீத பாசமாகட்டும், தங்கையை அவமானப்படுத்தும் போது தன் கோபத்தை அடக்கிக் கொள்வதிலாகட்டும் அசத்துகிறார் இளையதிலகம்…. பாக்யராஜூக்கும் செகண்ட் இன்னிங்க்ஸ் அமர்க்களமாகவே இருக்கிறது…. அவர் நடித்த காட்சிகள் வரைக்கும் அவரே இயக்கிக் கொண்டாரோ என்னவோ? செம கலக்கல்……

படத்துக்கு பெரிய பலம் பாடல்கள்…. தேனாக தித்திக்கிறது…. இசை தேவிஸ்ரீபிரசாத்….

இயக்குனர் ராஜா ரொம்பவும் புத்திசாலி…. காட்சிகளை ஜெட் வேகத்தில் நகர்த்திப் போகிறார்…. குறிப்பாக Translition எனப்படும் ஒரு காட்சிக்கும், இன்னொரு காட்சிக்கும் இடைப்பட்ட பிரேம்களை உருவாக்க இயக்குனரும், எடிட்டரும் ரொம்பவும் மெனக்கெட்டிருக்கிறார்கள்…. உதாரணமாக பாரின் அப்பா லண்டனில் இருந்து கிளம்பும்போது பிளைட் வானத்தில் பறக்கிறது…. வானத்தை அப்படியே காட்டுபவர்கள் ஒரு தும்பியையும் காட்டுகிறார்கள்…. அதாவது பாரினில் இருந்து கிராமத்துக்கு வந்து விட்டாராம்…. இதுபோல Technically Sound காட்சிகள் ஏராளம்…..

திரிஷா ஹீரோவை லண்டன் குரங்கு எனச் சொல்லும் காட்சியில் ஆரம்பித்து அதே ஷாட்டில் மணிவண்னன் மற்றும் அவரது குடும்பமும் அறிமுகமாகும் காட்சியை மிக நீண்ட டேக்காக எடுத்திருக்கிறார் இயக்குனர்….. ஏதாவது ஒரு ஆர்ட்டிஸ்ட் டைமிங் மிஸ் செய்தாலே ஏராளமான பிலிம் வேஸ்ட் ஆகும் ரிஸ்க் இருந்தும் மிகச் சிறப்பாக அந்தக் காட்சியை இயக்கியிருக்கிறார்…. இசையும், கேமிராவும் அந்தக் காட்சிக்கு துணை செய்கிறது….

வானில் இருக்கும் இரு நட்சத்திரங்களைக் காட்டி ஒரு நட்சத்திரம் நான், இன்னொன்று என் தங்கை என்று பிரபு சொல்வது ரொம்பவும் ஜாலியான கற்பனை… இரு நட்சத்திரங்களுக்கு இடையில் மூன்றாவது நட்சத்திரம் தோன்றுவது சூப்பர்…..

ஒரு அரைச்ச மாவு கதை தான் என்றாலும் விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் பாடல்கள் மூலம் வெற்றி பெற்றிருக்கிறார் ராஜா…..


இம்சை அரசன் 23ஆம் புலிகேசி

ஜூலை 10, 2006

108வது முறையாக உத்தமபுத்திரனை உல்டா அடித்திருக்கிறார்கள் ரொம்பவும் சுவையாக…. இப்போதைய ட்ரெண்டுக்கு சவால் விடும் வகையில் சரித்திரப் படத்தை இயக்கி வெற்றி பெற்றிருக்கும் இயக்குனர் சிம்புதேவனுக்கு முதலில் நம் வாழ்த்துக்கள்!!!

கைப்புள்ள, வீரபாகு என காமெடியில் கலாய்த்துக் கொண்டிருந்த வடிவேலுவா இது? அரசனாக, புரட்சிவீரனாக, காதலனாக, காமெடியனாக கலக்கி இருக்கிறார் கலக்கி…. முழுக்க முழுக்க வடிவேலுவின் ஹீரோயிஸம் படத்தை தூக்கி நிறுத்துகிறது….

படத்தின் காலக்கட்டமாக 18ஆம் நூற்றாண்டின் இறுதியை இயக்குனர் தேர்ந்தெடுத்திருக்கிறார்…. ஆங்கிலேயர்களை வீரபாண்டிய கட்டபொம்மன் ஏனையோர் தீவிரமாக எதிர்த்துக் கொண்டிருந்த காலமது…. அதே நேரத்தில் எட்டப்பன் போன்ற மன்னர்கள் ஆங்கிலேயர்களுக்கு ஜால்ரா அடித்து தங்கள் முதுகெலும்பை வளைத்து கூன் போட்டுக் கொண்டிருந்த காலமும் அதுதான்…..

சோழர்பாளையம் எனும் நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் சிற்றரசர் மொக்கைய மகாராஜா… வாரிசு இல்லாமல் துன்பப்படுகிறார்…. அவருக்கு பிறந்த 22 குழந்தைகளும் சொல்லி வைத்தாற்போல பிரசவத்தின் போது இறந்து விடுகின்றன…. 23வது பிரசவத்தில் இரட்டை குழந்தைகள்…. நாட்டைக் கைப்பற்ற நினைக்கும் அரசரின் மைத்துனரும், ராஜகுருவுமாகிய சங்கிலிமாயன் ஜோசியம் பார்க்கிறார்…. ஒரு பிள்ளை சுயபுத்தியுடனும், ஒரு பிள்ளை சொல்புத்தியுடனும் நடந்துகொள்ளும் என ஜோசியர் சொல்ல…. சுயபுத்தி குழந்தையை எங்கேயாவது விட்டு விடுமாறு மருத்துவரிடம் சொல்கிறார்…. எதிர்பாராவிதமாக அந்தக் குழந்தை மருத்துவரிடமே வளர்கிறது…..

சொல்புத்தி குழந்தை வளர்ந்து வாலிபன் ஆகி சோழர்பாளையத்தை ராஜகுரு சங்கிலிமாயனின் ஆலோசனையுடன் வெள்ளையருக்கு சலாம்போட்டு ஆட்சி நடத்துகிறார்… முகம்மது – பின் – துக்ளக் ஸ்டைலில் 23ஆம் புலிகேசி நாட்டை ஆளுவது செம காமெடி….. வெள்ளையருக்கு ஆதரவளிக்க வேண்டாம் என கோரி அண்டை நாட்டு மன்னன் புறா மூலம் கடிதம் அனுப்ப…. கடிதத்தை தூக்கிப் போட்டு விட்டு மன்னர் புறாவை ரோஸ்ட் செய்து தின்கிறார்….

ஆட்சியின் அலங்கோலத்தை கண்டு புரட்சிப்படை அமைக்கிறார் சொல்புத்தி குழந்தை…. இவர் உக்கிரபுத்தன் என்ற பெயரில் மருத்துவரால் வளர்க்கப்பட்டு நாளந்தா பல்கலைக்கழகம் சென்று படித்து வருகிறார்…. அந்நியரை நாட்டை விட்டு துரத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இளைஞர்களைத் திரட்டி மன்னருக்கு எதிராக கலகம் நடத்தி இறுதியில் மன்னரும் திருந்தி, ராஜகுருவும் திருந்தி சுபம்…

இம்சை அரசனாக வடிவேலு அமர்க்களப்படுத்தி இருக்கிறார்…. “மன்னா” என்று யாராவது அழைத்தால் “என்னா” என்று கூறும் தெனாவட்டு, அரண்மனையில் வேலை செய்யும் சோம்பேறிகளிடம் மாரடிக்கும் போது காட்டும் முகபாவம் (வடிவேலு ஸ்டைலில் முடியலை), அந்தப்புரத்தில் அலங்கரித்த கன்னியர்களிடம் போடும் ஆட்டம் என்று செம சூப்ப்ப்ப்பபர்மா……………

உக்கிரபுத்தனாக வரும் இன்னொரு வடிவேலு செம சீரியஸ்…. கொஞ்சம் கூட காமெடி கிடையாது…. “பூட்டியச் சிறையினை உடைப்போம், புரட்சியின் கதவைத் திறப்போம்” என நீலமலைத்திருடன் ஸ்டைலில் குதிரை மீது பயணம் செய்தபடியே கம்பீரமாக பாட்டுப் பாடியப்படியே இவர் வரும் ஓபனிங்குக்கு ரசிகர்களின் விசில் சத்தத்தால் தியேட்டர் கூரை அதிர்கிறது….. ரஜினி, கமல் ஓபனிங்குக்கே இப்படி ஒரு வரவேற்பு கிடைத்திருக்குமா என்பது சந்தேகம் தான்…..

இயக்குனர் பிரபல கார்ட்டூனிஸ்ட் சிம்பு…. மதனின் சிஷ்யர்…. “மன்னா” என்ற தலைப்பில் ஆனந்த விகடனில் நூற்றுக்கணக்கான ஜோக்குகள் வரைந்தவர்…. அந்த ஜோக்குகளையே படம் முழுக்க புத்திசாலித்தனமாக பயன்படுத்தி இருக்கிறார்…. வசனமும் இவரே…. அசத்தலாக இருக்கிறது…. தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல இயக்குனர் கிடைத்திருக்கிறார்….

வீரபாண்டிய கட்டபொம்மனுடன் மோதும் நிக்சன் துரை இந்தப் படத்துக்கும் வருகிறார்…. “வானம் பொழிகிறது” ஸ்டைலில் வசனமும் உண்டு…..

ஒருகாட்சியில் (ஜால்ரா) அமைச்சர் சொல்லும் ஒரு வசனம் செம நக்கல்… “எங்க பரம்பரையே போராக இருந்தாலும் சரி… சூழ்ச்சியாக இருந்தாலும் சரி…. எட்ட நின்று வேடிக்கைப் பார்ப்பது தான் வழக்கம்” :-)

அதுபோலவே மன்னர் கரடி வேட்டைக்குப் போய் கரடியே மன்னர் முகத்தில் காரி உமிழ்வது செம காமெடி…. ஒரு கட்டத்தில் காரி உமிழப்பட்ட மன்னரே வெள்ளையர் கலெக்டர் முகத்தில் காறி உமிழும்போது அமைச்சர் சொல்கிறார் “கரடி காறி உமிழ்ந்த எங்கள் மன்னரே உன் முகத்தில் காறி உமிழ்ந்து விட்டார்… இதைவிட என்னய்யா உனக்கு கேவலம் வேணும்?” – அமைச்சராக இளவரசு நடித்திருக்கிறார்…. சரியான தேர்வு….

படத்தில் குறிப்பிடவேண்டிய முக்கியமான விஷயம் ஆர்ட் டைரக்சன் மற்றும் இசை…. இரண்டுமே இந்தப் படத்தை தூக்கி நிறுத்துகிறது…. பின்னணிப் பாடகர்களின் குரல் 1960களுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது….

ராஜமாதாவாக மனோரமா, ராஜகுருவாக நாசர், கொல்லனாக மனோபாலா, மருத்துவராக வெண்ணிற ஆடை மூர்த்தி, கதாநாயகிகளாக தேஜாஸ்ரீ மற்றும் இன்னொரு பெண் (அழகியில் “ஒளியிலே தெரிவது தேவைதையா” பாடலில் வரும் அதே தேவதை) நீண்டநாள் கழித்து ஜோசியராக வி.எஸ். ராகவன், தளபதியாக ஸ்ரீமன் என்று எல்லோரும் பாத்திரத்தை உணர்ந்து அருமையாக வாழ்ந்திருக்கிறார்கள்….

வடிவேலு குதிரை ஓட்டுகிறார், கத்திச்சண்டை போடுகிறார், காதல் காட்சிகளில் கலக்குகிறார்… ஹீரோக்களே உஷார்…. உங்களுக்கு போட்டி சக ஹீரோக்கள் அல்ல….

இந்தப் படத்தில் சொல்லவேண்டிய விஷயங்கள் ரொம்ப இருந்தாலும் கூட விமர்சனம் நீண்டுக்கொண்டே போவதால் படத்தைப் பார்த்து நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்….. இந்தப் படம் பார்ப்பது நிச்சயமாக ஒரு வித்தியாசமான அனுபவம்….

இம்சை அரசன் – இடி முழக்கம்!


சூப்பர்மேன் ரிடர்ன்ஸ்

ஜூலை 5, 2006

கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கழித்து சூப்பர்மேன் திரும்பி வந்திருக்கிறார்… இதுவரை 4 பாகங்கள் கிறிஸ்டோபர் ரீவ்ஸ் நடித்து வெளிவந்தது…. 5வது பாகமான இந்தப் படம் புது சூப்பர் மேனான பிராண்டன் ரூத் நடித்து வெளிவந்திருக்கிறது…. பிராண்டன் ரூத் கிறிஸ்டோபர் ரீவ்ஸின் இளவயது தோற்றத்திலேயே அச்சு அசலாக இருக்கிறார்…. சுமார் ஆறரை அடி உயரம்… செம வெயிட் என்று அமர்க்களமான தோற்றம்….

படத்தின் கதையெல்லாம் சும்மா கப்சா தான்…. வேறு யாராவது ஹீரோ செய்தால் கடுப்பாகி விடுவோம்…. சாகசம் செய்வது சூப்பர்மேன் என்பதால் மன்னித்து விட்டு விடலாம்…. சூப்பர்மேன் கீழே விழுந்துக் கொண்டிருக்கும் விமானத்தை தன் சக்தி கொண்டு தூக்கி(?) காப்பாற்றுகிறார்…. அப்போதே ஆரம்பித்து விடுகிறது பூச்சுற்றல்….

இந்தப் படத்தில் மெலிதாக இழையோடும் காதல், பாசம் படத்துக்குப் பெரிய பலம்…. ஜூனியர் சூப்பர்மேன் அழகாக இருக்கிறான்…. சூப்பர்மேன் (முன்னாள்) காதலியும் சூப்பராகவே இருக்கிறார்…

கிரிப்டன் கிரகத்தில் பிறந்த சூப்பர் மேன் 4 வயதிலேயே தன் கிரகத்தை விட்டுப் பிரிந்து பூமியில் வாழவேண்டிய சூழ்நிலை…. பூமியில் இருக்கும் எந்த சக்தியாலும் சூப்பர்மேனை அழிக்க முடியாது…. கிரிப்டன் கிரகத்தின் கிரிஸ்டல் போன்ற ஒரு தாது கொண்டு மட்டுமே சூப்பர்மேனை அழிக்கமுடியும் என்று தெரிந்து கொண்ட வில்லன் அந்த தாதுவை கொண்டு மேலும் சில விசித்திர ஆய்வுகளைச் செய்து ஒரு புதிய கண்டத்தை உருவாக்க நினைக்கிறார்…. அந்தக் கண்டம் உருவானால் அமெரிக்கா முழுவதுமே அழிந்து விடும்….

அந்தக் கண்டம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வரும்போது சூப்பர்மேன் முட்டுக்கட்டையாக வருகிறார்…. இறுதியில் சூப்பர் மேனே அந்தக் கண்டத்தை தூக்கிக் கொண்டு போய் (அட்ரா…. அட்ரா….) விண்வெளியில் தூக்கிப் போட்டு விடுகிறார்…. அந்தக் கண்டம் கிரிப்டன் கிரகத்தின் தாது கொண்டு உருவாக்கப்பட்டதால் சூப்பர்மேன் உயிரிழக்கிறார்…

உயிரிழந்தாலும் முன்போலவே வந்து காதலியைச் சந்தித்துக் கொஞ்சுகிறார்…. மகனிடம் (ஆனா இவனுக்கு சூப்பர் மேன் இனிஷியல் இல்லே…. அதற்கு ஒரு இளிச்சவாயன் இருக்கிறார்) பாசம் காட்டுகிறார்…. சூப்பர்மேன் ஆச்சே… நம்பித்தான் தீரணும்…..

பின்னணி இசை மிரட்டுகிறது…. ஆனாலும் சூப்பர்மேனின் ட்ரேட் மார்க் இசை பழைய பாகங்களில் இருந்ததுபோல இல்லை…. ரொம்பவும் மைல்ட் ஆக இருக்கிறது….. படத்தின் டைட்டிலுக்கு போடப்படும் பின்னணி இசை நிஜமாகவே பயமுறுத்துகிறது…. படத்தில் மிஸ் செய்யக்கூடாத விஷயம் டைட்டில்…. மிகப் பிரம்மாண்டமான கற்பனைகூட செய்துப் பார்க்க முடியாத 3டி அனிமேஷன்….

பலகாட்சிகளில் எது கிராபிக்ஸ் சூப்பர்மேன்? எது ஒரிஜினல் சூப்பர்மேன் என்று கொஞ்சம் கூட கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு துல்லியம்…. வில்லனாக வரும் மொட்டை சூப்பராக நடித்திருக்கிறார்…. அவரது செட்டப்பும் கலக்கி இருக்கிறார்…..

படம் முடித்து வெளியே வரும்போது எங்குமே பூக்கடைகளைக் காண முடியவில்லை…. காரணம் படம் பார்த்தவர்களின் காதுகளில் தியேட்டர்காரர்களே சொருகி அனுப்புவது தான்…. :-)

சூப்பர்மேன் – அசத்துகிறார்….


பாரிஜாதம்

ஜூலை 3, 2006

கத்தி இல்லை… இரத்தம் இல்லை… அவனைப் போட்டுர்றேன்… அவன் கையை வெட்டு, காலை வெட்டு…. ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்…… டாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்….. இரைச்சல் இல்லை….. முதலில் பாக்யராஜுக்கு கை கொடுக்க வேண்டும்…. ரவுடிக்களும், தாதாக்களும் ஆக்கிரமித்திருக்கும் தமிழ்த் திரையுலகை அழகான தனது ஸ்கிரிப்ட் கொண்டு மீட்டிருக்கிறார்….

ரொம்ப ரொம்ப சுமாரான ஒரு கதையை எப்படி சுவாரஸ்யமாக்குவது என்ற வித்தை பாக்யராஜுக்கு இன்னமும் கை கொடுக்கிறது…. சீதா வீட்டில் வேலைக்காரியாக இருக்கும் கதாநாயகியைத் அவர் மகனுக்கே திருமணம் செய்துவைக்க நினைக்கிறார் சீதா…. இதை கதாநாயகியிடம் மட்டுமே சொல்லுகிறார்…. தன் பையனுக்கும், கணவனுக்கும் சொல்லாமல் சஸ்பென்ஸ் மெயிண்டெயின் செய்கிறார்….. சொல்லுவதற்கு முன்பே உயிரை வேறு விட்டு விடுகிறார்….. உண்மை தெரிந்து கதாநாயகன் கதாநாயகியை கைபிடிப்பது என்ற ஒற்றை வரி கதை….. தன் ட்ரீட்மெண்டால் மிகவும் சுவாரஸ்யமான திரைப்படமாக இதை உருவாக்கியிருக்கிறார் பாக்யராஜ்….

குறிப்பாக ஹீரோயின் எழுதும் கதையில் வரும் கதாபாத்திரங்களை தன் மகனாகவும், ஹீராயினாகவும் சீதா கற்பனை செய்து கொள்ள விஷுவல் ட்ரீட்மெண்ட் சூப்பர்…. ஹீரோயின் சரண்யாவைப் பொறுத்தவரை குத்துவிளக்கு மாதிரி இருக்கிறார்…. சினிமாவுக்கு ஏற்றத் தோற்றம் அவருக்கு இல்லை… ஹீரோ பிருத்வி செம ஸ்மார்ட்டாக இருக்கிறார்….. இருக்காதா பின்னே? எம்.ஜி.ஆரின் பேரன் ஆச்சே?

இடைவேளைக்குப் பிறகே பாக்யராஜ் சம்பூர்ணம் என்ற கேரக்டராக உள்ளே நுழைகிறார் (விசு ஸ்டைல்?)…. பாக்யராஜ் தான் எல்லாக் குழப்பங்களையும் தீர்த்து வைக்கிறாராம்…. பிரகாஷ்ராஜுக்கு ஏற்ற வெயிட் கேரக்டர் இல்லை…. அவருக்கு நடிக்க ஸ்கோப் ரொம்பவும் கம்மியாக இருக்கிறது…. ஹீரோ அப்படியே 20 வருஷத்துக்கு முன்னால் இருக்கும் பாக்யராஜை இமிடேட் செய்கிறார்….. படம் முழுவதும் இழைக்கப்பட்டிருக்கும் மெல்லிய நகைச்சுவை படத்துக்குப் பலம்…..

படத்தின் ஒரிஜினல் கதையை விட ஹீரோயின் (எழுத்தாளராம்) எழுதும் பாரிஜாதம் கதை சூப்பராக இருக்கிறது… அந்தக் கதையின் முடிவு ரொம்பவும் சோகம்….

ரொம்ப நாளுக்குப் பிறகு காதுக்கு இனிமையான பின்னணி இசை…. புதுமுக இசையமைப்பாளருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது…. ஒரு பாடல் ரொம்பவும் அருமை…..

பாரிஜாதம் – நன்றாகவே மணக்கிறது….


எனக்கு நேர்ந்த வளர்சிதை மாற்றங்கள்!

ஜூன் 14, 2006

என்னுடைய டீனேஜை நான் கடந்தபோது நிகழ்ந்த நிகழ்வுகள் என்ன என்று கொஞ்சம் திரும்பிப் பார்க்க நினைக்கிறேன்… என் ஞாபகங்களில் இருக்கும் சில விஷயங்கள் :

1) 19 வயது முடியும் போது கூட எனக்கு சரியாக மீசை வளரவில்லை…. கொஞ்சம் ஒல்லியான தேகம் வேறு என்னை 10th படிக்கும் பையன் போல காட்டியது…. அப்பா பயன்படுத்தும் கோத்ரேஜின் Die Stick ஒன்றை உபயோகித்து எனக்கு திக்கான மீசை இருப்பதுபோல ஒரு இமேஜ் கிரியேட் செய்தேன்….

2) எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் உடனே காதல் வந்து தொலைத்தது…. பெண் கருப்போ சிவப்போ, அழகோ அசிங்கமோ, கிழவியோ குமரியோ, எங்கே இருந்து தான் வந்து தொலைக்குமோ அந்த காதல்….

3) சும்மா ஸ்டைலுக்காக தம் அடிக்கும் பழக்கமும் அப்போது இருந்தது…. ஒரு பெண்ணிடம் பந்தாவாக தம், தண்ணி பழக்கம் இல்லை என்று கூறியபோது என்னடா ஆம்பளை நீ என்று கேட்டிருந்தாள்…..

4) வாழ்க்கையைப் பற்றிய பயம் கொஞ்சம் கொஞ்சமாக வரத் தொடங்கியிருந்தது… எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து சிந்தித்தே கொஞ்சம் முடி கொட்டியது….

5) முடி கொட்டியது என்றதுமே இந்த நினைவு வருகிறது…. ஷாம்பூ போட்டு தலைகுளிக்கும் போதெல்லாம் தலையைத் தேய்த்து முடித்தவுடன் ஒரு இருபது முடியாவது கையோடு வரும்…. என் அப்பாவுக்கு கொஞ்சம் வழுக்கை என்பதால் எனக்கும் வழுக்கை வந்து தொலைக்குமோ என்ற பயத்தால் கண்ட கண்ட மூலிகை எண்ணெய்களை உபயோகித்தேன்…..

6) ஹீரோவுக்காகவும், காதல் மற்றும் சண்டை காட்சிகளுக்காகவும் படம் பார்க்கும் வழக்கம் போய் ஹீரோயின் யார் என்று பார்த்து படம் பார்க்கும் வழக்கம் அப்போது இருந்தது…. பலான படங்களுக்கும் நண்பர்களோடு ஆர்வத்துடன்(!) போய் படம் பார்த்து போஸ்டரில் இருக்கும் பிட்டுகள் கூட ஒரிஜினல் படத்தில் இல்லாமல் ஏமாந்தது நினைவுக்கு வருகிறது….

7) பெண்களுடன் பேசும் போது அவர்களது மேனரிசத்தை ரசிக்கத் தொடங்கியது அப்போதிருந்து தான்…

8) என் குரல் வேறு கொஞ்சம் இனிமையாக இருக்குமா, அதனால் போனில் பேசும்போது எதிர்தரப்பில் இருக்கும் ஒருவர் மேடம் என்று சொல்லி விட்டார்…. இதற்காக டாக்டரைப் பார்த்து என் குரலில் ஏதாவது பிரச்சினையா என்று ஆலோசனை செய்தேன்….

9) செக்ஸ் என்றாலே என்னவென்று (சரியாகத்) தெரியாததால் எந்த செக்ஸ் சம்பந்தப்பட்ட ஆர்ட்டிக்கிள் பத்திரிகைகளில் வந்தாலும் ஆர்வத்தோடு ஒளித்து வைத்து படிப்பேன்… குறிப்பாக தினத்தந்தியில் டாக்டர் ஆஷாவின் பதில்கள், தினமலர் வாரமலரில் அனுராதா ரமணின் அட்வைஸ்கள் (மேக்ஸிமம் செக்ஸ் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தான்), டாக்டர் நாராயண ரெட்டியின் நக்கீரன் தொடர்கள்…..

10) உடை அணிவதற்காக ரொம்ப நேரம் மெனக்கெடுவேன்…. உடை அலங்காரம் முடித்தபிறகு திருப்தி இல்லையென்றால் வேறு சட்டையை எடுத்து மெனக்கெட்டு அயர்ன் செய்து மீண்டும் அணிவேன்…. இதனால் ஏற்படும் நேர விரயம் ஒரு பொருட்டே அல்ல….

11) முடிந்தவரை மூஞ்சியை சிரித்த மூஞ்சியாக (பிகர்களுக்காக) வைத்துக் கொள்ள முயற்சி செய்துகொண்டிருந்தேன்…. இருந்தாலும் இயல்பிலேயே வாய்த்த சிடுமூஞ்சி இந்த முயற்சியை முறியடித்தது….

12) நான் கொஞ்சம் கலராக இருந்தாலும் கூட மாநிறமோ என்று மனதுக்குள் ஒரு ஐயம்…. இதனால் தினமும் மூன்று வேளை Fair & Lovely பயன்படுத்துவேன்….

13) தாடி, மீசை சரியாக இல்லையென்றாலும் கூட ஷேவிங் மட்டும் 2 நாளைக்கு ஒரு முறை கட்டாயமாக செய்வேன்…

14) ஹேர்-ஸ்டைலில் ரொம்பவும் ஆர்வம் இருந்தது…. ஹேர்-கட் திருப்தியாக அமைந்தால் சலூன்காரருக்கு எக்ஸ்ட்ராவாக 5 ரூபாய் டிப்சும் உண்டு…..

15) ரொம்பவும் ஒல்லியான தேகம் இருந்ததால் ஜிம்முக்கு போகும் வழக்கம் இருந்தது… அங்கே பீமன்கள் போல இருந்தவர்கள் நக்கலடிப்பார்கள்….

என் ஞாபகத்தில் இருக்கும் இவையெல்லாம் எனக்குள் நிகழ்ந்த மாற்றங்கள்… அல்லது நானாக மாற்றியவை….


கொலைநகரம்

ஜூன் 10, 2006

தலைநகரம் படம் சமீபத்தில் பார்த்தேன்… ஏன் இந்த தலைப்போ தெரியவில்லை… பேசாமல் கொலைநகரம் என்று டைட்டில் வைத்திருக்கலாம்….

தமிழ் சினிமாவைப் பிடித்த சாபக்கேட்டின் படி இதுவும் தாதா கதை தான்… ரைட்டு என்ற பெயரில் ஒரு தாதா… திருந்தி வாழ நினைக்கும் அவருக்கு ஏற்படும் பிரச்சினைகள்… முடிவு என்று ரொம்பவும் Typical ஆன Subject….

ரைட்டாக இயக்குனர் சுந்தர் சி நடித்திருக்கிறார்… முகத்தில் சுத்தமாக Expression எதுவுமே காட்டாமல் தாதாவாக நடித்திருக்கிறார்… அவருக்கு நண்பனாக வரும் மெட்டி ஒலி போஸ் நன்றாக நடித்திருக்கிறார்…. ஆக்சன் காட்சிகளில் மட்டும் பட்டையைக் கிளப்புகிறார் சுந்தர் சி…. மார்கழி மாத பஜனைக் கூட்டத்தோடு வந்து இன்னொரு தாதாவின் வயிற்றில் ஒரு கோடு போட்டு விட்டுப் போகிறாரே…. செம அதிர்ச்சி தரும் காட்சி….

பிரகாஷ் ராஜ் ஏன் இதுபோன்ற கதாபாத்திரங்களை ஒத்துக் கொள்கிறாரோ தெரியவில்லை…. அவருக்கு தீம் மியூசிக் எல்லாம் கொடுக்கும்போது ஏதோ கலக்கப் போகிறார் என்று நினைத்து ஏமாற்றம் தான் அடைகிறோம்…

வடிவேலு வழக்கம்போல வெடிவேலு…. நாய்சேகராக இவரும் ஒரு குட்டித் தாதா (தாதா படங்களில் காமெடியனும் தாதா தானா?) இருந்தாலும் வின்னர், கிரி, லண்டன் என்று சுந்தர் சி இயக்கிய படங்களில் எல்லாம் கலக்கிய அளவுக்கு இந்தப் படத்தில் இல்லை…. பிகரை உஷார் செய்வதற்காக மேக்கப் போட்டுக் கொண்டு வரும் வடிவேலு மயில்சாமியிடம் கேட்கிறார்…. நான் எப்படி இருக்கென்?… அதற்கு மயில்சாமியின் பதில் “அண்ணே… சும்மா கும்முன்னு பிராத்தல் மாதிரி இருக்கீங்கண்ணே” :-)

படத்தில் பாய் ஆக வரும் கிழவர் சூப்பராக நடித்திருக்கிறார்… அவரது குரல்(!) அவருக்கு பிளஸ் பாயிண்ட்…. டெல்லி கணேசும் வழக்கம்போல அவரது கேரக்டரை (அரசியல்வாதி) மெருகேற்றி இருக்கிறார்…..

இசை சுமார் தான்… ஏதோ நினைக்கிறேன் பாட்டு மட்டும் ஓகே…. அந்தப் பாடலுக்கு இயக்குனர் அமைத்திருக்கும் காட்சிகள் சுவாரஸ்யம்…. இருந்தாலும் பாடலில் ஹீரோயின் சுறுசுறுப்பாக இருக்க ஹீரோவோ தேமேவென்று அசமஞ்சமாக இருப்பது கடுப்பு…..

கத்தி எடுத்தவன் நல்லவனாக இருந்தாலும் கத்தியால் தான் சாவான் என்று மெசேஜ் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர்…. 13 ரீலில் வெட்டு, குத்து என்று வன்முறையை நியாயப்படுத்தி விட்டு 14வது ரீலில் மெசேஜ் சொல்லுவது எவ்வளவு அபத்தம் என்று நம் தமிழ் சினிமா இயக்குநர்களுக்கு என்றுதான் புரிந்து தொலைக்குமோ தெரியவில்லை…..

ஒளிப்பதிவு, எடிட்டிங் என்று தொழில்நுட்ப ரீதியிலாக படம் சுமார் தான் என்றாலும் தமிழ் சினிமாவைப் பீடித்திருக்கும் தாதா Fever, தலைநகரத்தை கரையேற்றுகிறது…..


காமிக்ஸ் ரசிகர்களுக்கு!

ஜூன் 8, 2006

தமிழில் காமிக்ஸ் என்பது 1960களில் வெளிவர ஆரம்பித்தது… எனக்குத் தெரிந்து “மாலை மதி” முதலில் காமிக்சாக 1960களின் மத்தியில் வந்தது…. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய காமிக்ஸ்களின் உரிமையை வாங்கி தமிழில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிட்டார்கள்….

ஆனாலும் தமிழ் காமிக்ஸின் பொற்காலம் ஆரம்பமானது முத்து காமிக்ஸ் தோன்றிய பிறகே…. 1971ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட முத்து காமிக்ஸின் முதல் கதை இரும்புக்கை மாயாவி…. 128 பக்கங்கள் கொண்ட அந்தப் புத்தகத்தின் விலை அப்போதே 90 காசு…. முல்லை தங்கராசன் என்பவரை பொறுப்பாசிரியராக கொண்டு முத்து காமிக்ஸ் ராஜநடை போடத் தொடங்கியது….

பெரும் வரவேற்பின் காரணமாக முத்து காமிக்ஸ் 80களின் ஆரம்பத்தில் முத்து காமிக்ஸ் வாரமலர் (தினமலர் வாரமலருக்கே அது தான் முன்னோடி) என்ற ஒரு இதழைத் தொடங்கியது…. ஆனாலும் மாத இதழுக்கு கிடைத்த வரவேற்பு வார இதழுக்கு கிடைக்காததால் அது கொஞ்சம் ஆண்டுகளிலேயே நிறுத்தப் பட்டு விட்டது….

முத்து காமிக்ஸின் அபார வெற்றியைத் தொடர்ந்து அதே நிறுவனத்தார் 1984ஆம் ஆண்டு லயன் காமிக்ஸ் என்ற புதிய காமிக்ஸ் இதழையும் தொடங்கினார்கள்…. முத்து காமிக்ஸின் உரிமையாளர் தன் மகனுக்காக தொடங்கிய காமிக்ஸ் அது…. அவரது மகன் விஜயன் லயன் காமிக்ஸின் ஆசிரியராக பொறுப்பேற்ற போது அவரது வயது 17.

இதே ஆண்டில் பிரபல தினத்தந்தி குழுமமும் காமிக்சுகளுக்கு இருக்கும் ஆர்வத்தைப் பார்த்து தானும் ராணி காமிக்ஸ் தொடங்கியது…. 1984 முதல் சுமார் பத்து ஆண்டுகளுக்கு காமிக்ஸ் விற்பனை தமிழ்நாட்டில் கொடிகட்டி பறக்க ஆரம்பித்தது…. குறிப்பாக Cowboy கதைகளை தமிழக குழந்தைகளும், இளைஞர்களும் பரவலாக ரசிக்க ஆரம்பித்தார்கள்….

லயன் காமிக்சும் தன் சாம்ராஜ்யத்தை ஜூனியர் லயன், மினி லயன், திகில் காமிக்ஸ் என்று புதுப் புது காமிக்ஸ்களைத் தொடங்கி விரிக்க ஆரம்பித்தது….

இந்தக் காலக்கட்டத்தில் குழந்தைப் பருவத்தில் இருந்த நானும் காமிக்ஸுகளுக்கு அடிமை ஆனேன்… அதுவும் லயன் காமிக்ஸ் தீபாவளி, கோடை விடுமுறை, பொங்கல் ஆகிய சமயங்களில் Digest போன்று ஸ்பெஷல் இதழ் வெளியிடுவார்கள்… அவற்றைப் படிக்க பெரும் ஆர்வம் காட்டுவேன்… 1987ஆம் ஆண்டு லயன் காமிக்ஸ் தீபாவளி மலராக வெளியிட்ட சூப்பர் ஸ்பெஷல் 10 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டு பெரும் வெற்றி பெற்றது…. சமீபத்தில் அந்த இதழ் ஒன்றினை ரூ. 500 பிரீமியம் செலுத்தி வாங்கினேன்….

என் காலக்கட்டத்தில் காமிக்ஸ் படித்த சிலர் இன்னமும் காமிக்ஸ் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள் (நானும் தான்) …. நிறைய பேர் படித்த காமிக்ஸ்களை கலெக்டு செய்தும் வைத்திருக்கிறார்கள்…. நான் கிட்டத்தட்ட 85 சதம் லயன் காமிக்ஸ் வைத்திருக்கிறேன்….

1993-94களில் தனியார் தொலைக்காட்சிகள் வந்தபிறகு குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் காமிக்ஸ் மோகம் குறைய ஆரம்பித்தது…. ராணி காமிக்ஸ் தாக்குப் பிடிக்க முடியாமல் 500 இதழ்களோடு தன் கணக்கை முடித்துக் கொண்டது…. மினி லயன், ஜூனியர் லயன், திகில் இதழ்களும் ஊத்தி மூடிக்கொண்டன….

இப்போதும் மிஞ்சி நிற்பது முத்து மற்றும் லயன் காமிக்ஸ்கள் மட்டுமே…. இந்த கோடை விடுமுறைக்கு லயன் காமிக்ஸ் வெளியிட்டிருக்கும் இதழின் விலை என்ன தெரியுமா? ரூபாய். 100/-…. என்னைப் போன்ற ஒரு சிலர் அதையும் வாங்கிக் கொண்டு தான் இருக்கிறோம்….

யாராவது Ex-காமிக்ஸ் ரசிகர்கள் இருந்தால் சொல்லுங்கள்…. மீண்டும் நீங்கள் காமிக்ஸ் படிக்க நான் உதவுகிறேன்… காமிக்ஸ் படிப்பதால் ஒரு பெரிய நன்மை என்னவென்றால் நம் வயது 20 வருடம் குறைந்தது போல உணருகிறோம்….

அறிவியலால் கண்டுபிடிக்க முடியாத கால இயந்திரந்தின் பயனை காமிக்ஸ் படிப்பது மூலம் நாம் அடையலாம்…..


புதுப்பேட்டை

ஜூன் 6, 2006

சென்னை எழும்பூரில் இருக்கும் புதுப்பேட்டைக்கும் செல்வராகவனின் புதுப்பேட்டைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை… நிழல் உலகத்தை தவுசண்ட் வாட்ஸ் லைட் போட்டு வெளிச்சப்படுத்தி காட்ட நினைத்திருக்கிறார் இயக்குநர்… இந்த அளவுக்கா நிழல் உலகம் சென்னையில் இருக்கிறது என்ற அதிர்ச்சி…. இருந்தாலும் இயக்குநர் கொஞ்சம் மிகைப்படுத்தியே காட்டி இருப்பார்… இவ்வளவு மோசமாக இருக்காது என்றும் நினைக்கத் தோன்றுகிறது… மும்பை வேண்டுமானால் இதுபோல இருக்கலாம்… சென்னை அப்படி அல்ல என்று ஒவ்வொரு சென்னைவாசியும் உறுதியிட்டு சொல்லலாம்….

பொதுவாக சென்னையில் தாதாக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அவ்வளவாக ஒத்துப் போகாது… தாதாக்களின் காட்பாதர்கள் இங்கே சேடுகள் தான்…. அரசியல்வாதிகள் அல்ல…. ஓரிரு தாதாக்கள் மட்டுமே அரசியல் சார்பு நிலை எடுத்திருப்பதை பழைய தாதாக்களின் வரலாற்றை புரட்டிப் பார்த்தால் தெரியும்….

உயிர் காக்க போராடும்போது ஒருவனின் வலிமை பன்மடங்காகிறது என்பது படம் சொல்லும் பாடம்…. கார்ப்பரேஷன் பள்ளி மாணவன் ஒருவன் எப்படி நிதி அமைச்சர் (?) ரேஞ்சில் உயருகிறான்… அதற்காக அவன் என்னவெல்லாம் தரங்கெட்ட வேலைகளை செய்ய வேண்டியிருக்கிறது என்று காட்ட முனைந்திருக்கிறார் இயக்குநர்….

கதாநாயகன் நல்லவன் அல்ல…. கதாநாயகி ஒழுக்கமானவள் அல்ல…. படத்தில் எந்த கதாபாத்திரத்துக்கும் நல்ல குணமே கிடையாது… எல்லோருமே அயோக்கியர்கள், எல்லோருமே சுயநலவாதிகள்… இப்படியாக தமிழ் சினிமாவின் பல இலக்கணங்களை உடைத்திருக்கும் இயக்குநரின் தைரியத்துக்கு சபாஷ் போடலாம்….

எங்க ஏரியா உள்ளே வராதே என்ற பாடலுடன் அறிமுகமாகும் தனுஷ் (அந்தப் பாடலில் சிம்புவை ஏகத்துக்கும் போட்டுத் தாளிக்கிறார்) படத்துக்காக மெனக்கெட்டு உழைத்திருக்கிறார்…. இடைவேளை வரை அவரது பாத்திரத்துக்கு ப்ளஸ் பாயிண்டாக இருக்கும் அவரது உடலே இடைவேளைக்குப் பிறகு மைனஸ் பாயிண்டாக அமைகிறது….

பெற்ற அப்பாவையே நயவஞ்சகாக போட்டுத் தள்ளுவது… தன்னை உருவாக்கிய தலையின் தலையையே எடுத்து விடுவது… திருமணமாகப் போகும் நண்பணின் தங்கைக்கு விடாப்பிடியாக தாலி கட்டி அவள் வாழ்க்கையை நாசமாக்குவது இதெல்லாம் செய்பவர் தான் புதுப்பேட்டை ஹீரோ….

கதையை மையமாகக் கொள்ளாமல் களத்தை மையப்படுத்தி வெகுவேகமாக காட்சிகளை நகர்த்தி இருப்பதில் இயக்குநரின் புத்திசாலித்தனம் வெளிப்படுகிறது…. இந்த அளவுக்கு வேகமான, சுவாரஸ்யமான காட்சிகளோடு ஒரு படம் தமிழில் வந்திருக்கிறதா என்பதே சந்தேகம் தான்… இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் என்ற சகல துறைகளும் கச்சிதமாக இயக்குநருக்கு கை கொடுத்திருக்கிறது… குறிப்பாக பாலகுமாரனின் வசனம்….

ஹீரோவை எதிர்கோஷ்டி போட்டுத் தள்ள தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறது… அந்தச் சூழ்நிலையில் வரும் பாடல் (கமல் பாடியது) மிக மிகப் பொருத்தமாக சொருகப் பட்டிருக்கிறது… கமலின் ஹைபிட்ச் வாய்ஸ் ஹீரோவுக்கு மட்டுமல்ல நமக்கும் கிலி கொடுக்கிறது….

அதைப் போலவே பாடலே இல்லாமல் வெறும் இசையை மட்டுமே வைத்து ஹீரோ கேங்கில் சேர்ந்து வளரும் காட்சிகளை காட்டி இருப்பது அட்டகாசம்… பின்னணி இசையில் பின்னி பெடலெடுத்திருக்கும் யுவன் ஏனோ பாடல்களில் கோட்டை விட்டு விட்டார்… மிக இனிமையான பாடல் ஆடியோ சிடியில் இடம் பெற்றிருந்தது… அது படத்தில் மிஸ்ஸிங்….

க்ளைமேக்ஸில் தன் குழந்தையைக் காப்பாற்ற தனுஷ் ஊரை விட்டே போக முடிவு செய்கிறார்…. வழக்கமான தமிழ் சினிமா க்ளைமேக்ஸை இயக்குநர் தேர்ந்தெடுத்து விட்டாரே என்று நினைக்கும்போதே… அடுத்த காட்சியில் தன் மகனை குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு எதிரியைத் தாக்க புறப்படுகிறார் தனுஷ்…. வில்லன் வலியில்லாமல் சாக நினைத்து தன்னைத் தானே போட்டுக் கொள்வது கொடூரம்….

க்ளைமேக்ஸ் முடிந்தவுடன் வரும் Follow-up காட்சிகள் நகைச்சுவையாக இருக்கிறது… தவிர்த்திருக்கலாம்…

புதுப்பேட்டை…. இரத்தக் கோட்டை!!!


Follow

Get every new post delivered to your Inbox.