சென்னை எழும்பூரில் இருக்கும் புதுப்பேட்டைக்கும் செல்வராகவனின் புதுப்பேட்டைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை… நிழல் உலகத்தை தவுசண்ட் வாட்ஸ் லைட் போட்டு வெளிச்சப்படுத்தி காட்ட நினைத்திருக்கிறார் இயக்குநர்… இந்த அளவுக்கா நிழல் உலகம் சென்னையில் இருக்கிறது என்ற அதிர்ச்சி…. இருந்தாலும் இயக்குநர் கொஞ்சம் மிகைப்படுத்தியே காட்டி இருப்பார்… இவ்வளவு மோசமாக இருக்காது என்றும் நினைக்கத் தோன்றுகிறது… மும்பை வேண்டுமானால் இதுபோல இருக்கலாம்… சென்னை அப்படி அல்ல என்று ஒவ்வொரு சென்னைவாசியும் உறுதியிட்டு சொல்லலாம்….
பொதுவாக சென்னையில் தாதாக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அவ்வளவாக ஒத்துப் போகாது… தாதாக்களின் காட்பாதர்கள் இங்கே சேடுகள் தான்…. அரசியல்வாதிகள் அல்ல…. ஓரிரு தாதாக்கள் மட்டுமே அரசியல் சார்பு நிலை எடுத்திருப்பதை பழைய தாதாக்களின் வரலாற்றை புரட்டிப் பார்த்தால் தெரியும்….
உயிர் காக்க போராடும்போது ஒருவனின் வலிமை பன்மடங்காகிறது என்பது படம் சொல்லும் பாடம்…. கார்ப்பரேஷன் பள்ளி மாணவன் ஒருவன் எப்படி நிதி அமைச்சர் (?) ரேஞ்சில் உயருகிறான்… அதற்காக அவன் என்னவெல்லாம் தரங்கெட்ட வேலைகளை செய்ய வேண்டியிருக்கிறது என்று காட்ட முனைந்திருக்கிறார் இயக்குநர்….
கதாநாயகன் நல்லவன் அல்ல…. கதாநாயகி ஒழுக்கமானவள் அல்ல…. படத்தில் எந்த கதாபாத்திரத்துக்கும் நல்ல குணமே கிடையாது… எல்லோருமே அயோக்கியர்கள், எல்லோருமே சுயநலவாதிகள்… இப்படியாக தமிழ் சினிமாவின் பல இலக்கணங்களை உடைத்திருக்கும் இயக்குநரின் தைரியத்துக்கு சபாஷ் போடலாம்….
எங்க ஏரியா உள்ளே வராதே என்ற பாடலுடன் அறிமுகமாகும் தனுஷ் (அந்தப் பாடலில் சிம்புவை ஏகத்துக்கும் போட்டுத் தாளிக்கிறார்) படத்துக்காக மெனக்கெட்டு உழைத்திருக்கிறார்…. இடைவேளை வரை அவரது பாத்திரத்துக்கு ப்ளஸ் பாயிண்டாக இருக்கும் அவரது உடலே இடைவேளைக்குப் பிறகு மைனஸ் பாயிண்டாக அமைகிறது….
பெற்ற அப்பாவையே நயவஞ்சகாக போட்டுத் தள்ளுவது… தன்னை உருவாக்கிய தலையின் தலையையே எடுத்து விடுவது… திருமணமாகப் போகும் நண்பணின் தங்கைக்கு விடாப்பிடியாக தாலி கட்டி அவள் வாழ்க்கையை நாசமாக்குவது இதெல்லாம் செய்பவர் தான் புதுப்பேட்டை ஹீரோ….
கதையை மையமாகக் கொள்ளாமல் களத்தை மையப்படுத்தி வெகுவேகமாக காட்சிகளை நகர்த்தி இருப்பதில் இயக்குநரின் புத்திசாலித்தனம் வெளிப்படுகிறது…. இந்த அளவுக்கு வேகமான, சுவாரஸ்யமான காட்சிகளோடு ஒரு படம் தமிழில் வந்திருக்கிறதா என்பதே சந்தேகம் தான்… இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் என்ற சகல துறைகளும் கச்சிதமாக இயக்குநருக்கு கை கொடுத்திருக்கிறது… குறிப்பாக பாலகுமாரனின் வசனம்….
ஹீரோவை எதிர்கோஷ்டி போட்டுத் தள்ள தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறது… அந்தச் சூழ்நிலையில் வரும் பாடல் (கமல் பாடியது) மிக மிகப் பொருத்தமாக சொருகப் பட்டிருக்கிறது… கமலின் ஹைபிட்ச் வாய்ஸ் ஹீரோவுக்கு மட்டுமல்ல நமக்கும் கிலி கொடுக்கிறது….
அதைப் போலவே பாடலே இல்லாமல் வெறும் இசையை மட்டுமே வைத்து ஹீரோ கேங்கில் சேர்ந்து வளரும் காட்சிகளை காட்டி இருப்பது அட்டகாசம்… பின்னணி இசையில் பின்னி பெடலெடுத்திருக்கும் யுவன் ஏனோ பாடல்களில் கோட்டை விட்டு விட்டார்… மிக இனிமையான பாடல் ஆடியோ சிடியில் இடம் பெற்றிருந்தது… அது படத்தில் மிஸ்ஸிங்….
க்ளைமேக்ஸில் தன் குழந்தையைக் காப்பாற்ற தனுஷ் ஊரை விட்டே போக முடிவு செய்கிறார்…. வழக்கமான தமிழ் சினிமா க்ளைமேக்ஸை இயக்குநர் தேர்ந்தெடுத்து விட்டாரே என்று நினைக்கும்போதே… அடுத்த காட்சியில் தன் மகனை குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு எதிரியைத் தாக்க புறப்படுகிறார் தனுஷ்…. வில்லன் வலியில்லாமல் சாக நினைத்து தன்னைத் தானே போட்டுக் கொள்வது கொடூரம்….
க்ளைமேக்ஸ் முடிந்தவுடன் வரும் Follow-up காட்சிகள் நகைச்சுவையாக இருக்கிறது… தவிர்த்திருக்கலாம்…
புதுப்பேட்டை…. இரத்தக் கோட்டை!!!